வெள்ளியங்காடு-மஞ்சூரில் அரசு பஸ்சை குட்டியுடன் வழிமறித்த காட்டு யானைகள் கூட்டம்..!

மேட்டுப்பாளையம்: மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்திற்கு கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு வழியாக மஞ்சூர் சாலை ஒன்று செல்கிறது.

அடர்ந்த வனப்பகுதியில் பயணிக்கும் இந்த பகுதியில் 30-க்கும் மேற்பட்ட மலைகிராமங்கள் மற்றும் பில்லூர் அணை உள்ளது. மேலும் நீலகிரி மாவட்டத்திற்கு இது மூன்றாவது வழியாகவும் பயன்படுத்தபட்டு வருகிறது. இந்நிலையில் அங்குள்ள மக்களின் பயன்பாட்டிற்காக அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவையில் இருந்து வெள்ளியங்காடு மஞ்சூர் சாலை வழியாக பில்லூர் அணைக்கு சென்ற அரசு பஸ் ஒன்றினை காட்டு யானைகள் கூட்டம் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இரண்டு குட்டிகளுடன் இருந்த 5 காட்டு யானைகள் கூட்டம் திடீரென சாலைக்கு வந்து அரசு பஸ்சை வழிமறித்து சாலையின் நடுவே நின்றது. இதனால் பயணிகள் அச்சமடைந்தனர்.
மேலும் அடுத்தடுத்து பின்னால் வந்த வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. வெகுநேரம் பஸ்சை முன்னேறி செல்ல விடாமல் சாலையிலேயே நடமாடிய யானைகள் பின்னர் வெகுநேரம் கழித்து அங்கு இருந்து சென்றது. இதன் பின்னரே பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனால் அந்த பகுதியில் சற்று நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.