வால்பாறையில் கேரள அரசுப் பேருந்தை துரத்திய ஒற்றை காட்டு யானை: பஸ்சை 8 கி.மீ. தூரம் பின்னோக்கி ஓட்டிய டிரைவர்-மரண பயத்தில் தவித்த பயணிகள்..!

கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடிக்கு வனப்பகுதி வழியாக சாலை உள்ளது. 110 கி.மீ. தூரம் கொண்ட இந்த சாலையில் சுமாா் 70 கி.மீ. தூரம் அடா்ந்த வனப்பகுதியாகும்.

இந்த சாலையில் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி நடமாடும் என்பதால் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்தை வனத்துறையினா் அனுமதிப்பதில்லை. இந்த நிலையில் சாலக்குடியில் இருந்து தமிழக எல்லையான மழுக்குப்பாறை எஸ்டேட் வரை இயக்கப்படும் கேரள அரசுப் பஸ் ஒன்று காலை வந்தது. இந்த பஸ்சை டிரைவர் அம்புஜாக்சன் என்பவா் ஓட்டி வந்தார். பஸ் சோலையாறு மின்நிலையம் அருகே உள்ள அம்பலப்பாறை என்ற இடத்தில் செல்லும்போது சாலையின் நடுவே ஒற்றை யானை இருப்பதை டிரைவர் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அப்போது தன்னை நோக்கி பஸ் வருவதைக் கண்ட யானை, பஸ்சை பார்த்து முன்னோக்கி வந்தது. இதனால் டிரைவர் பஸ்சை பின்னால் இயக்கினாா். ஆனால் யானை விடாமல் பஸ்சை விரட்டியபடி சென்றது. சரிவான மலைப்பாதை என்பதால் திருப்புவதற்கு வழி இல்லாததால், டிரைவர் தொடா்ந்து 8 கி.மீ. தூரம் வரை பஸ்சை பின்னோக்கியே ஓட்டினார். ஆனைக்கயம் என்ற இடத்துக்கு வந்தபோது யானை சாலையை விட்டு விலகி வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் சுமாா் ஒரு மணி நேரம் மரண பயத்தில் தவித்த பஸ் டிரைவர், பயணிகள் உள்ளிட்டோா் அதன் பிறகு நிம்மதிப் பெருமூச்சுடன் பயணத்தைத் தொடா்ந்தனா்.
இந்த சம்பவத்தை பஸ் பயணிகள் சிலா் விடியோ எடுத்துள்ளனா். இது சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.