கோவிலில் வடமாநில பெண்ணிடம் நூதன முறையில் நகை மோசடி..!

கோவை இடையர் வீதியைச் சேர்ந்தவர் சஞ்சய் குமார், வியாபாரி , வட மாநிலத்தைச் சேர்ந்தவர்.இவரது மனைவி வீணா (வயது 43) இவர் நேற்று ரங்கே கவுடர் வீதியில் உள்ள ஜெயின் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்த போது 60 வயது மதித்தக்க 2 ஆண்கள் அங்கு நின்று கொண்டிருந்தனர். அவர்கள் தங்களை குஜராத்தில் இருந்து வந்ததாக வீணாவிடம் அறிமுகம் செய்து கொண்டனர்.ஒரு ஆஸ்பத்திரி பெயரைச் சொல்லி அது எங்கே உள்ளது? என்று .கேட்டனர். அவர் தனக்கு தெரியாது என்று கூறினார், பின்னர் அவர்கள் அந்த பெண்ணிடம் உங்கள் கணவருக்கு தொழில் சரியில்லை. அவர் உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம் .எனவே நீங்கள் இந்தக் கோவிலில் கண்களை மூடிக்கொண்டு 25 தடவை மகாவீர் , மகாவீர் என்று சொல்லுமாறு கூறினார். அப்படி சொன்னால் பிரச்சனைகள் எல்லாம் சரியாகிவிடும் என்றும் கூறினார்கள். முன்னதாக இந்த மந்திரம் சொல்லும்போது நீங்கள் நகை அணிந்து இருக்க கூடாது , அதை இந்த பையில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள் என்று ஒரு பையை கொடுத்து அதில் போட சொன்னார்கள். அவர் அணிந்திருந்த 7 பவுன் நகைகளை அந்தப் பையில் போட்டார். பின்னர் கண்களை மூடிக் கொண்டு 25 தடவை மகாவீர் என்று சொல்லிக் கொண்டிருந்தார். கண் விழித்த பார்த்தபோது அந்த இரு ஆசாமிகளையும் காணவில்லை. அவர்கள் கொடுத்த பையை பார்த்த போது அதில் கல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த பையை மாற்றி விட்டு இரு ஆசாமிகளும் தலைமறை வாகிவிட்டனர். இதுகுறித்து வீணா வெரைட்டி ஹால்ரோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.