குதிரையை குளிக்க வைக்கும்போது குட்டையில் சிறுவன் தவறி விழுந்து பரிதாப பலி

கோவை சின்னவேடம்பட்டி உடையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது40). மின்சாரவாரிய ஊழியார். இவரது மகன் ஸ்ரீசாந்த் (17). இவர் 10-ம்
வகுப்பு வரை படித்து உள்ளார்.
இவருக்கு குதிரை ஏற்றத்தில் ஆர்வம் ஏற்பட்டது. அதற்காக பயிற்சி
பெற்று வந்தார். இதையடுத்து ஸ்ரீசாந்த் ஒரு குதிரையை வாங்கி வளர்த்து
வந்தார். சம்பவத்தன்று ஸ்ரீசாந்த் தனது நண்பர்களுடன் பெரியநாயக்கன்
பாளையத்தை அடுத்த கோக்கரையான் மலை பகுதிக்கு குதிரையுடன் சென்றார்.
அங்கு குட்டையில் குதிரையை குளிக்க வைத்தார். அப்போது திடீரென அவர்
எதிர்பாராத விதமாக தண்ணீரில் தவறி விழுந்தார். ஸ்ரீசாந்த் தண்ணீரில்
தத்தளிப்பதை கண்டு அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள்
சத்தம் போட்டனர். அவர்களின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி
வந்தனர். அவர்கள் தண்ணீரில் குதித்து ஸ்ரீசாந்தை மீட்டனர். பின்னர் அவரை
மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால்
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசாருக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிறுவனின் உடலை
மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார்
வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.