கோவையில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த டாஸ்மாக் பார்கள் மூடல்..!

கோவை மாவட்டத்தில், டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் கோவை வடக்கில், 166 மதுக்கடைகள், தெற்கில், 149 மதுக்கடைகள் செயல்படுகின்றன.

இதில் 100-க்கும் மேற்பட்ட கடைகளில், அனுமதியின்றி, விதிமுறைக்கு மாறாக பார் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து, நள்ளிரவு 12 மணிக்குச் சென்றாலும், அதிகாலை, 6 மணிக்கு சென்றாலும் மது விற்பனை நடந்து வருகிறது.
இதையடுத்து உரிமைத் தொகை செலுத்தாமல், சட்ட விரோதமாக செயல்படும் பார்களை கண்காணித்து மூட, மேற்பார்வையாளர்களுக்கு டாஸ்மாக் நிறுவனத்தில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக செயல்பட்டால், மதுவிலக்கு போலீசாருக்கு புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், டாஸ்மாக் மேலாளர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து கோவை மலுமிச்சம்பட்டி, செட்டிபாளையம், நாச்சிபாளையம் ரோடு, வைசியாள் வீதி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த பார்கள் மூடப்பட்டன.
இதுகுறித்து தொழிற சங்கத்தினர் கூறும்போது, 2 மாதத்துக்கு மட்டும் உரிமைத்தொகை செலுத்திவிட்டு, பார்களை தொடர்ந்து நடத்தி வந்தனர். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. விதிமுறைக்கு உட்பட்டு பார்களை நடத்த வேண்டும். அதிகாரிகள் அடிக்கடி ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றனர்.