கோவையில் பட்டப்பகலில் துணிகரம்… பர்தா அணிந்து வீட்டில் நைசாக புகுந்து நகை கொள்ளை- பெண் உட்பட 2 பேர் கைது..!

கோவை சூலூர் பக்கம் உள்ள கலங்கல், தென்றல் நகரை சேர்ந்தவர் அந்தோணி ராஜ் .இவரது மனைவி ரத்னா (வயது 42) இவர் நேற்று காற்றோட்டத்துக்காக வீட்டின் கதவை திறந்துவைத்து கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.அப்போது உடல் முழுவதையும் மறைத்து பர்தா அணிந்திருந்த ஒருவர் வீட்டினுள் நைசாக புகுந்தார். பீரோவில் இருந்த 2 பவுன் செயினை திருடினார். இதை பார்த்த ரத்னா சத்தம் போட்டார்.இதனால் பர்தா அணிந்தவரும்,வெளியில் நின்று கொண்டிருந்தவரும் தப்பி ஓடிவிட்டனர்.இது குறித்து ரத்னா சூலூர் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் வழக்கு பதிவு செய்து சூலூர், கலங்கல் ரோட்டை சேர்ந்த ஹானஸ்ட் ராஜ் (வயது 24) தென்றல் நகரை சேர்ந்த ஏசுதாஸ் மனைவி ரோஸ் (வயது 48) ஆகியோரை நேற்று கைது செய்தனர் .2 பவுன் செயின் மீட்கப்பட்டது. பட்டப் பகலில் பர்தா அணிந்து வீடு புகுந்து நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..