எனது பாக்சிங் கிளவுஸில் பிரதமர் மோடியின் ஆட்டோகிராஃபை பெறுவேன்: தங்கப் பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன்..!

பர்மிங்கம்: தனது பாக்சிங் கிளவுஸில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்டோகிராஃபை பெற உள்ளதாக இந்திய குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன் தெரிவித்துள்ளார்.

அவர் நடப்பு காமன்வெல்த்தில் தங்கம் வென்றுள்ளார்.

26 வயதான நிகத், கடந்த மே மாதம் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்றிருந்தார். இந்நிலையில், காமன்வெல்த்தில் 50 கிலோ ஃப்ளைவெயிட் பிரிவு இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இது அவர் வெல்லும் முதல் காமன்வெல்த் பதக்கம்.

அவரது வெற்றியை பலரும் கொண்டாடி வருகின்றனர். பிரதமர் மோடியும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இத்தகைய சூழலில்தான் தனது பாக்சிங் கிளவுஸில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்டோகிராஃபை பெற உள்ளதாக நிகத் சொல்லியுள்ளார்.

‘நாட்டுக்காக தங்கம் வென்றதில் மகிழ்ச்சி. உலக சாம்பியன்ஷிப் தொடருக்கும் பிறகு நான் விளையாடும் பெரிய தொடர் இது. நான் தங்கம் வெல்வேன் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். அதனை இப்போது நிஜாமாக்கியத்தில் மகிழ்ச்சி. பதக்கம் பெற்ற போது தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அந்த தருணத்தில் எனது உணர்வுகளை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தொடர்ந்து இதே போல விளையாடி நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன் என நம்புகிறேன்.

பிரதமர் மோடியை சந்திக்க நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். கடந்த முறை அவரோடு செல்ஃபி எடுத்துக் கொண்டேன். இந்த முறையும் புதிதாக செல்ஃபி எடுத்துக் கொள்வேன். அதே போல கடந்த முறை எனது டி-ஷர்ட்டில் அவரது ஆட்டோகிராஃபை பெற்றேன். இந்த முறை எனது பாக்சிங் கிளவுஸில் ஆட்டோகிராஃப் பெற உள்ளேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.