இங்கிலாந்து புதிய பிரதமராக லிஸ் டிரஸ் பதவி ஏற்றார்… ரிஷி சுனக்கை விட 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி..!!

ங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க ஆளும் கன்சர்வேடிவ் கட்சி நடவடிக்கை மேற்கொண்டு வந்தது.

பிரதமர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாளி எம்.பி.க்களான ரிஷி சுனக், சூவெல்லா பிரேவர்மன் மற்றும் அமைச்சர்கள் லிஸ் டிரஸ், பென்னி மார்டன்ட் உள்பட 8 பேர் களத்தில் இருந்தனர். இதனையடுத்து, பல சுற்றுகளாக நடந்த வாக்கெடுப்பில் குறைவான வாக்குகளை பெற்ற வேட்பாளர்கள் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து போட்டியில் இருந்து வெளியேறினர்.

இதையடுத்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது. ஆளும் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவரே நாட்டின் பிரதமராக நியமிக்கப்படுவர் என்பது இங்கிலாந்தின் அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள விதி. அந்த வகையில் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதியமைச்சரான ரிஷி சுனக்குக்கும், தற்போதைய வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் கடந்த சில வாரங்களாக தபால் மற்றும் ஆன்லைன் மூலமாக வாக்களித்து வந்தனர். வாக்கு பதிவு கடந்த வெள்ளிக்கிழமை மாலையுடன் முடிவடைந்தது. அதை தொடர்ந்து வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

இந்திய நேரப்படி நேற்று (செப்., 5) வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரதமர் தேர்தலில் லிஸ்ஸிடம் தோல்வியடைந்துள்ளார்.

பிரதமர் போரிஸ் ஜான்சான் இன்று (செப்., 6) ஸ்காட்லாந்துக்கு சென்று அங்கு விடுமுறையை கழித்து வரும் ராணி 2-ம் எலிசபெத்தை நேரில் சந்தித்து முறைப்படி தனது ராஜினாமாவை அறிவிப்பார். அதன் பின்னர் லிஸ் டிரஸ் ராணியை சந்தித்து புதிய அரசை அமைக்க அனுமதி கோரவுள்ளார்.

ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் புதிய பிரதமர் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இங்கிலாந்து அரச பாரம்பரிய நடைமுறைகளின்படி புதிய பிரதமர்பதவியேற்பு விழா இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனையில்தான் நடைபெறுவது வழக்கம். ஆனால் ராணி எலிசபெத்தின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அரச மரபை உடைத்து ஸ்காட்லாந்தில் இந்த விழா நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.