இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் – ஓபிஎஸ் திட்டவட்டம்.!!

சென்னை கிண்டியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில், டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம், பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, வி.கே.சிங், எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நள்ளிரவு 12 மணி வரை நீடித்த இந்த பேச்சு வார்த்தையில், தொகுதி பங்கீடு, எந்த சின்னத்தில் போட்டியிடுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், பாஜகவுடன் அதிக கட்சிகள் கைகோர்த்துள்ளதால், மெகா கூட்டணி உருவாக்கியுள்ளது என்று கூறினார். மக்களவை தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிட உள்ளோம் என்பது குறித்து விரைவில் அறிவிப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இதையடுத்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று பாஜக சார்பில் எந்த நிர்பந்தமும் தரவில்லை எனக்கூறினார். மேலும், தேர்தல் ஆணையம் உரிய நேரத்தில் குக்கர் சின்னத்தை ஒதுக்கும் என்று நம்பிக்கை இருப்பதாக கூறிய அவர், அமமுக வேட்பாளர்கள் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்று உறுதிப்படக் கூறினார். மோடி 3 ஆவது முறையாக பிரதமரானால், தமிழ்நாட்டிற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வர முடியும் என்று நம்பிக்கையில் கூட்டணி அமைத்து இருப்பதாக டி.டி.வி. தினகரன் கூறினார்.

மக்களவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து தற்போது வரை, தான் முடிவெடுக்கவில்லை என்றும் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.