இரண்டாம் தர்ம யுத்தத்தை தொடங்கியுள்ளேன் – ஓ.பன்னீர்செல்வம் பேச்சு..!

ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க.வில் சசிகலாவின் ஆதிக்கம் ஏற்பட்ட போது ஓ.பி.எஸ்., ஜெயலலிதா சமாதி முன்பு அமர்ந்து தர்ம யுத்தத்தில் ஈடுபட்டார்.

ஓ.பி.எஸ்.சின் இந்த தர்மயுத்தம் அவரது அரசியல் பயணத்தில் வெற்றிக்கு வழிவகுத்தது என்றே கூறலாம். இதன் பின்னர் சசிகலா சிறைக்கு சென்ற பிறகு எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்பட்ட ஓ.பி.எஸ். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற அந்தஸ்தையும் எட்டிப் பிடித்தார்.

ஆனால் அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு அதிகரித்ததை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு சரிந்து தற்போது மீண்டும் தர்ம யுத்தத்தை அவர் கையில் எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் உண்மையான தொண்டர்களின் ஆதரவுடன் 2ஆம் தர்மயுத்தத்தை தொடங்கியுள்ளேன் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் பேசிய அவர், “எம்ஜிஆர் உருவாக்கிய விதியை மீறி கட்சிக்கு களங்கம் ஏற்படுத்திய தீய சக்தியான இபிஎஸ்-ஐ ஜெயலலிதாவின் விசுவாசிகளான நாங்கள் வீழ்த்துவோம். தேர்தல் பணிகளை முழுமையாக செய்தால், 39 தொகுதியிலும் நமது அணி நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.