நகை திருட்டு வழக்கில் கணவன், மனைவி கைது..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்(54). இவர் புங்கம்பள்ளி பகுதியில் உள்ள தனியார் மில்லில் எலக்ட்ரீசியனாக பணி புரிந்து வருகிறார். இவரது வீட்டின் அருகே மோகனின் தாயார் ராஜம்மாள்(73) வீட்டில் விருதுநகரை சேர்ந்த குமாரசாமி(36), அவரது மனைவி முருகேஸ்வரி(31) இருவரும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர். முருகேஸ்வரி ராஜம்மாளிடம் நன்கு  பழகி வந்த நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் ராஜம்மாளின் வீட்டில் டப்பாவில் போட்டு வைத்திருந்த ரெண்டே முக்கால் பவுன் தங்க நெக்லஸ் மற்றும் இரண்டு பவுன் தங்கச் செயின் திருடு போனது. இது குறித்து சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில்  சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில்  ராஜம்மாளின் உறவினர் தேவராஜ் என்பவர்  குமாரசாமி, முருகேஸ்வரி இருவரும் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருப்பதை கண்டு அருகே சென்று பார்த்தபோது முருகேஸ்வரியின் கழுத்தில் ராஜம்மாள் வீட்டில் திருடு போன தங்க நெக்லஸும், தங்கச் செயினும் அணிந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தேவராஜ் உடனடியாக அவரது உறவினர்கள் உதவியுடன் இருவரையும் பிடித்து சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் குமாரசாமியும் முருகேஸ்வரியும் சேர்ந்து ராஜம்மாள் வீட்டில் தங்க நகைகள் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து நகைகளை பறிமுதல் செய்த போலீசார் கணவன், மனைவி இருவரையும் கைது செய்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்..