சூலூர் அருகே டீ மாஸ்டரை தாக்கி பணம் பறித்த செய்த வங்கி மேலாளர் உள்பட 2 பேர் கைது..!

கோவை சின்னியம்பாளையம் அடுத்துள்ள வெங்கிட்டாபுரத்தை சேர்ந்தவர்
கார்த்திகேயன் (வயது 30). இவர் நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு
பேக்கிரியில் டீ மாஸ்டராக வேலை செய்து வருகிறார். சம்பத்தன்று கார்த்திகேயன் வேலை முடிந்து சம்பளம் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது வெங்கிட்டாபுரம் அருகே நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் கார்த்திகேயனை வழிமறித்து பணத்தை கேட்டு மிரட்டினர். ஆனால், அவர் பணம் தரமறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கார்த்திகேயனை தாக்கினர். இதில் காயம் அடைந்த கார்த்திகேயன், சத்தம் போட்டார்.
இதைகேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது ஒருவர் கார்த்திகேயனிடம் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். மற்ற 2 பேரையும் பொதுமக்கள் பிடித்தனர். இது குறித்து கார்த்திகேயன் சூலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையில் அவர்கள் ஒண்டிப்புதூர் சூர்யா நகரைச் சேர்ந்த மகேஷ்குமார் என்பதும், இவர் ரேஸ்கோர்சில் உள்ள தனியார் வங்கி மேலாளர் என்பதும், மற்றொருவர் புலியகுளம் அம்மன்குளத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் (23) என்பதும், தப்பி ஓடியவர் இவர்களது நண்பர் நிசாத் என்பவர் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில்
ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். தப்பி ஓடிய
நிசாத்தை போலீசார் தேடி வருகிறார்கள். வங்கி மேலாளரே வழிப்பறியில்
ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.