திமுகவின் குடும்ப வளர்ச்சிக்காக அரசு கேபிள் முடக்கபடுகிறது – முதல்வர் ஸ்டாலின் மீது அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு.!

ங்களின் குடும்ப நிறுவனங்களின் வளர்ச்சிக்கு. அரசு கேபிள் நிறுவனத்தை பலிகொடுக்க திமுக அரசு நினைக்கிறது என்று, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், “தொடர்ந்து ஏழை எளிய பொதுமக்களைப் பாதிக்கும் வகையிலேயே இந்த திறனற்ற திமுக அரசு செயல்பட்டு வருகிறது. சுமார் இருபது லட்சத்திற்கும் அதிகமான, எளிய பொது மக்களை வாடிக்கையாளர்களாகக் கொண்ட அரசு கேபிள் நிறுவனத்தின் ஒளிபரப்பில், கடந்த இரு நாட்களாக தடை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த இரண்டு நாட்கள் நமது மக்களுக்கு மீண்டும் 2006 2011 காலகட்ட கொடுங்கோல் குடும்ப ஆட்சியை நிச்சயமாக நினைவு படுத்தியிருக்கும்.

பெருமளவில் வாடிக்கையாளர்களை வைத்திருந்த ஹாத்வே கேபிள் நிறுவனத்தின் கேபிள் கம்பிகளை அறுத்தெறிந்தும் அதைச் சார்ந்திருந்த கேபிள் ஆப்பரேட்டர்களை அடியாட்களைக் கொண்டு மிரட்டியும் இந்த நிறுவனத்தை தமிழகத்தை விட்டே விரட்டி, கேபிள் தொழிலை தனது ஏகபோக உரிமையாக மாற்றிய திமுகவின் குடும்ப நிறுவனம் சுமங்கலி கேபிள் விஷன் தற்போது, அரசு கேபிள் நிறுவனத்தையும் முடக்கி, மீண்டும் கேபிள் தொழிலை ஒட்டுமொத்தமாகக் கைப்பற்ற முயற்சிப்பதும், அரசு கேபிள் ஒளிபரப்பில் தடைகளை ஏற்படுத்தி, அதன் மூலம் அவர்களுக்கு திமுக அரசு உதவுவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனம் 1996 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழகத்தில் இருந்த ஒட்டுமொத்த கேபிள் இணைப்புகளில் 80 சதவீதம் சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்திடம் சென்றது. 2001-2006 காலகட்டத்தில் மீண்டும் ஹாத்வே 60 சதவீத இணைப்புகள் பெற்று முன்னுக்கு வந்தது.

2006-2008 காலகட்டத்தில் கோபாலபுர குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளால் சுமங்கலி கேபிள் நிறுவனம் முடங்கிக் கிடந்தது. 2008க்கு பிறகு மீண்டும் தலைதூக்கிய சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தின் அசுர வளர்ச்சிக்கு திமுக அரசு உதவியதால் ஹாத்வே நிறுவனம் 2010ல் தமிழகத்தில் இனியும் தொழில் செய்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்று ஒட்டுமொத்த வணிக செயல்பாடுகளை நிறுத்திவிட்டது.

தொடர்ந்து சுமங்கலி கேபிள் விஷன் போன்ற, தங்கள் குடும்ப நிறுவனங்களின் வளர்ச்சிக்கு. இதற்கு முன்னர் தனியார் நிறுவனங்களைப் பலிகொடுத்த திமுக இப்போது அரசு நிறுவனத்தை பலிகொடுக்க நினைக்கிறது.

திறனற்ற திமுக அரசின் இந்த மக்கள் விரோத போக்கை தமிழக பாரதிய ஜனதா கட்சி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது என்பதை அழுத்தமாக தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.