மெரினாவில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க வலுக்கும் எதிர்ப்பு- உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு..!

மறைந்து முதல்வரும் தி.மு.க தலைவருமான கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் ஒரு நினைவிடம் கட்டவேண்டும் என்று தி.மு.க அரசு அறிவித்த நாள் முதல் தொடர்ந்து எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் கே.கே. ரமேஷ் என்பவர் பேனா நினைவுச்சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல் ஒன்றை செய்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த மு.கருணாநிதிக்கு சென்னை மெரீனா கடலில் 134 அடி உயர பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனை எதிர்த்து ஏற்கெனவே ராமநாதபுரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த நல்லதம்பி உள்ளிட்ட 8 மீனவர்கள், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிராக ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது,

மெரீனா கடல் பகுதியில் முன்னாள் முதல்வத் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க திட்டமிட்டு இருப்பது கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு எதிராக உள்ளது. சம்பந்தப்பட்ட அனைத்து மத்திய, மாநில அரசுகள் உள்ளடங்கிய எதிர்மனுதாரர்களுக்கு கடல் அளவு உயர்வதையும், அரிப்பையும் தடுக்கும் வகையில் உத்தரவிடவேண்டும். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கடலோர பிராந்தியங்களில் எவ்வித கட்டுமானப் பணியும் மேற்கொள்வதை தடுக்க உத்தரவிடவேண்டும்.

அனைத்து மாநிலங்களில் கடலோரங்களில் எவ்வித உடல்களையும் அடக்கம் செய்வதையும் தடுக்கவேண்டும். மெரீனா கடற்கரையில் உள்பகுதியில் 134 அடி உயர பேனா சின்னம் அமைக்கும் தமிழக அரசின் முடிவையும் ரத்து செய்யவேண்டும். இயற்கை நீதியின் அடிப்படை கொள்கைகளை பின்பற்றாமல் தமிழக அரசு இந்த பேனா சிலை அமைக்கும் நடவடிக்கை எடுத்துள்ளது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.