டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு : மது பாட்டில்கள் எரிந்து நாசம்-மர்ம நபருக்கு வலை..!

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள வெள்ளி குப்பம்பாளையத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் சூப்பர்வைசராக விஜய் ஆனந்த் என்பவரும் விற்பனையாளராக கரிய பெட்டன், குணசேகரன் ஆகியோரும் பணியாற்றி வருகிறார்கள் .நேற்று மாலையில் ஊழியர்கள் மதுபானங்களை விற்பனை செய்து கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 3பேர் திடீரென கையில் மறைத்து வைத்திருந்த 2பெட்ரோல் குண்டுகளை அடுத்தடுத்துடாஸ்மாக் கடைக்குள் வீசி எறிந்தனர். இதனால் கடைக்குள் இருந்த மதுபானங்கள் பாட்டில்கள் வெடித்து சிதறி தீப்பற்றி எரிய தொடங்கியது. உடனே கடையிலிருந்த ஊழியர்கள் கடையில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு வெளியில் ஓடி வந்து உயிர்தப்பினர் .பெட்ரோல் குண்டு வீசிய ஆசாமிகள் அங்கிருந்து பைக்கில் தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து சிறுமுகை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் உட்கோட்ட டி.எஸ்.பி பாலாஜி ,சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதயரேகா, ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.டாஸ்மாக் கடைமீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.