போத்தனூர் ரயில் நிலையத்தில் குவிந்து கிடக்கும் குப்பையால் துர்நாற்றம்; பயணிகள் அவதி; அதேபோல் கோவை ரயில் நிலையத்தில் தெருநாய் தொல்லை.!

கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து கேரளா மற்றும்
வடமாநிலங்களுக்கு அதிகளவு ரயில்கள் சென்று வருகிறது. கோவைக்கு வராத
ரயில்கள் கூட போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு வந்து செல்லும்.

போத்தனூர் ரயில் நிலையத்தில் 5 பிளாட்பாரம் உள்ளது. கோவை அடுத்தபடியாக
இங்கு தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். 100-க்கும்
மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள், ரயில்வே போலீசார் வேலை செய்து
வருகின்றனர். இந்த நிலையில் ரயில் நிலையத்தை கடந்த சில நாட்களாக சுத்தம் செய்யாமல் கிடக்கிறது. ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடக்கிறது. குப்பைகள்
அகற்றப்படாததால் துர்நாற்றமும் வீசி வருகிறது. இதனால் ரயில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் மிகவும் சிரமத்துகுள்ளாகி வருகின்றனர். வேலை செய்ய முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறியதாவது:-
போத்தனூர் ரயில் நிலையத்திற்கு தினமும் தூற்றுக்கணக்கான பயணிகள் வந்து
செல்கின்றனர். மிக பெரிய ரயில் நிலையமான கோவை ரயில் நிலையத்துக்கு வராத ரயில்கள் கூட இங்கு தான் வந்து செல்கிறது. இந்த நிலையில் ரயில்
நிலையம் முழுவதும் குப்பை குவியலாக உள்ளது.

ரயிலுக்காக வந்து காத்திருக்கும் பயணிகள் துர்நாற்றத்தால் மிகவும்
சிரமம் அடைந்து வருகின்றனர். ரயிலுக்காக வந்து செல்லும் எங்களாளேயே
இங்கு அமர முடியவில்லை. ரயில்வே பணியாளர்கள் நிலை பரிதாபமாக உள்ளது.
மேலும் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் ஒரு கடை மட்டும்தான் இயங்கி வந்தது.
தற்போது அதும் மூடப்பட்டு உள்ளது. இதனால் தண்ணீர் வாங்க கூட முடியவில்லை.
முதியவர்கள், சிறுவர்கள் மிகவும் சிரமத்துகுள்ளாகி வருகின்றனர்.
எனவே ரயில்வே நிர்வாகம் இங்கு குவிந்து உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை
எடுக்க வேண்டும். ஒரு கடையாவது திறக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கோவை ரயில் நிலையத்தில் 6 பிளாட்பாரங்கள் உள்ளன. இங்கு நாட்டின் பல்வேறு
பகுதிகளில் இருந்து தினமும் ரயில்கள் வந்து செல்கின்றன. 10
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் நிலையத்தை பயன்படுத்தி
வருகின்றனர். காலை முதல் இரவு வரை எப்போதும் ரயில் நிலையம் பரபரப்பாக
காணப்படும். சேலம் கோட்டத்தில் அதிகம் வருவாய் ஈட்டும் ரயில் நிலையமாக
கோவை ரயில் நிலையம் இருந்து வருகிறது.
இந்நிலையில் ரயில் நிலைய பிளாட்பாரங்களில் தற்போது தெருநாய்கள் தொல்லை
அதிகரித்துள்ளது. இவை, திடீரென ரயில் பயணிகளை துரத்தி அவர்களை
அச்சுறுத்துகின்றன. நாய் கடித்தால் உடனடியாக சிகிச்சை அளிக்க தேவையான
வசதிகள் ரயில் நிலையத்தில் இல்லை என கூறப்படுகிறது. இந்த நாய்களை ரயில் நிலையத்தில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.