கொலை வழக்கில் கைதான 6 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது..!

கடந்த 03.08.2023 அன்று செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கால்வாய் பகுதியைச் சேர்ந்த சுடலை மகன் மாயாண்டி (33) என்பவரை அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் செய்துங்கநல்லூர் கால்வாய், சுடலை கோவில் தெருவை சேர்ந்த சுடலைகண்ணு என்பவரது மகன்களான இசக்கிபாண்டி (50), ஆறுமுகம் (43), அர்ஜூனன் (44), செய்துங்கநல்லூர் கால்வாய் மாதா கோவில் தெருவை சேர்ந்த காசிபாண்டியன் மகன் செல்வம் (27), ஸ்ரீவைகுண்டம் பத்மநாபமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்களான வீரபுத்திரன் மகன் அங்கப்பன் (53) மற்றும் முத்துபலவேசம் மகன் தேவா (எ) தேவராஜ் (21) ஆகிய 6 பேரையும் செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
இவ்வழக்கின் எதிரிகளான இசக்கிபாண்டி, ஆறுமுகம், அர்ஜுனன், செல்வம், அங்கப்பன் மற்றும் தேவா (எ) தேவராஜ் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மநாபபிள்ளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் கே. செந்தில்ராஜ் 6 பேரையும்  குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மநாபபிள்ளை மேற்படி 6 எதிரிகளையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.
இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 13 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 8 பேர் உட்பட 112 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்..