கோவையில் துப்பாக்கியுடன் பதுங்கி இருந்த கொள்ளை கும்பல் கைது..!

கோவை உக்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் விவேக் ஆகியோர் பெரிய கடை வீதி லங்கா கார்னர் ரயில்வே பாலம் அருகே நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர்.அவர்கள் வைத்திருந்த பையில் குண்டுகள் நிரப்பபட்ட துப்பாக்கி (பிஸ்டல்), ஒரு அரிவாள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இவர்கள் திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் ( வயது 28 ) கடலூர் மாவட்டம் சிதம்பரம் ரத்தினபுரி சந்திரசேகர் (வயது 37) சிங்காநல்லூர், உப்பிலிபாளையம், வரதராஜபுரம் மெயின் ரோடு கவுதம் (வயது 28) என்பது தெரிய வந்தது. இவர்கள் 3 பேரும் கொள்ளை அடிக்கும் நோக்கத்துடன் அங்கு பதுங்கி நின்றது விசாரணையில் தெரியவந்தது.. இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.