விநாயகர் சிலை ஊர்வலம்: கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம்-கனரக வாகனங்களுக்கு தடை..!

கோவையில் நாளை( வெள்ளிக்கிழமை ) விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு குளங்களுக்கு எடுத்துச் செல்லும் ஊர்வலம் நடைபெறுவதை முன்னிட்டு கோவை மாநகரில் போக்குவரத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது ‘காலை முதல் இரவு வரை நகரில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவையில் விநாயகர் சிலை ஊர்வலம் நாளை வெள்ளிக்கிழமை மதியம் 1மணிக்கு குனியமுத்தூர் தர்மராஜா கோவிலில் இருந்து புறப்பட்டு குனியமுத்தூர் பாலக்காடு ரோடு வழியாக குனியமுத்தூர் குளத்தில் கரைக்கப்பட உள்ளது. இதேபோல மதியம் 2 மணிக்கு போத்தனூர் சாரதா மில் ரோட்டில் ஊர்வலம் தொடங்கி சுந்தராபுரம் வழியாக பொள்ளாச்சி ரோடு சென்று குறிச்சி குளத்தில் கரைக்கப்படுகிறது .இந்த விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு கோவையில் கீழ்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கோவை மாநகருக்குள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.காலை 11:00 மணி முதல் பாலக்காடு ரோட்டில் இருந்து உக்கடம் நோக்கி வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் கோவை புதூர் குளத்துப்பாளையம், ஆசிரமம் பள்ளி சந்திப்பு, புட்டு விக்கி சாலை, வழியாக உக்கடம் செல்ல வேண்டும் .11 மணி முதல் உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி செல்லக்கூடிய வாகனங்கள் சுங்கம், ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம், போத்தனூர் கடைவீதி, சாரதாமில் ரோடு, தக்காளி மார்க்கெட் வழியாக பொள்ளாச்சி ரோடு சென்றடையலாம். உக்கடத்திலிருந்து குனியமுத்தூர் வழியாக பாலக்காடு செல்லும் வாகனங்கள் பேரூர் பைபாஸ் ரோடு, சேத்துமா வாய்க்கால் செக்போஸ்ட் வழியாக புட்டுவிக்கி ரோடு வையாபுரி பள்ளி சந்திப்பு கோவைபுதூர் ஆசிரமம் பள்ளி சந்திப்பு குளத்துப்பாளையம் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும் பொள்ளாச்சியில் இருந்து சுந்தராபுரம் வழியாக பாலக்காடு ரோடு செல்லும் பஸ்கள் மற்றும் இதர வாகனங்கள் எல் அண்ட் டி பைபாஸ் ரோடு வழியாக மதுக்கரை மார்க்கெட் ரோடு பிள்ளையார்புரம் சந்திப்பு சுகுணாபுரம் வந்து பாலக்காடு சாலையை அடையலாம் .பொள்ளாச்சி சாலையில் இருந்து சுந்தராபுரம் வழியாக உக்கடம் செல்லும் வாகனங்கள் கற்பகம் கல்லூரி சந்திப்பு ஈச்சனாரி சுந்தராபுரம் ஆத்துப்பாலம் வழியாக உக்கடம் செல்ல வேண்டும் .பொள்ளாச்சி சாலை மற்றும் பாலக்காடு சாலையில் இருந்து கோவைக்கு வரும் லாரிகள் மற்றும் சரக்கு கனரக வாகனங்களுக்கு நகருக்குள் வர அனுமதி இல்லை .லாரிகள் அனைத்தும் எல்.அன் டி பைபாஸ் சாலையில் தான் செல்ல வேண்டும். மேற்கண்ட சாலைகள் வழியாக விநாயகர் சிலை ஊர்வலம் செல்ல வேண்டி இருப்பதால் ஊர்வல பாதையில் இருக்கும் வியாபாரிகள் – பொதுமக்கள் தங்களது வாகனங்களை மேற்படி பாதையில் நிறுத்துவதை தவிர்த்து போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.