பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங்குக்கு பாஜகவில் உயர் பதவி.!!

ஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங்குக்கு பாரதிய ஜனதா கட்சியில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதலமைச்சராகவும், மூத்த தலைவர்களில் ஒருவராகவும் இருந்தவர் அமரீந்தர் சிங். கடந்த ஆண்டு காங்கிரசில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கிய இவர், சில மாதங்களுக்கு முன்பு பாரதிய ஜனதாவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தற்போது அவருக்கு பாரதிய ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. இதே போன்று பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக இருந்து பின்னர் பாரதிய ஜனதாவுக்கு சென்ற மற்றொரு மூத்த தலைவரான சுனில் ஜாக்கரும், பாஜக தேசிய செயற்குழுவில் இடம்பிடித்து உள்ளார்.

உத்தரபிரதேச அமைச்சர் சுவாதந்திர தேவ் சிங்குக்கும் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. முன்னாள் காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான ஜெய்வீர் ஷெர்ஜில், பாரதிய ஜனதாவின் தேசிய செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதே போன்று தேசிய செயற்குழுவுக்கான சிறப்பு அழைப்பாளர்கள் உள்பட மேலும் சில மூத்த நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்..