ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ஆர் மகள் தூக்கு போட்டு தற்கொலை..!

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவின் 4வது மகள் உமா மகேஸ்வரி, ஜூப்ளி ஹில்ஸில் உள்ள தனது இல்லத்தில் இன்று தற்கொலை செய்துகொண்டதாகக் தகவல் வெளியாகி உள்ளது.

என்.டி.ஆர் என்று அழைக்கப்படும் என்.டி.ராமராவ், மிக பழமையான தெலுங்கு தலைவர்களில் ஒருவர். நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இவர், தெலுங்கு சுயமரியாதை முழக்கத்தில் 1982-ல் தெலுங்குதேசம் கட்சியை உருவாக்கி, ஒன்பது மாதங்களுக்குள் ஆட்சியை பிடித்தார். அப்போது பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்தில் காங்கிரசின் ஒற்றைக் கட்சி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, பல்வேறு சாதனைகளை படைத்தார்.

அவர் தனது மருமகன் சந்திரபாபு நாயுடு தலைமையிலான கிளர்ச்சியைத் தொடர்ந்து ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, 1996-ல் காலமானார். என்டிஆருக்கு எட்டு மகன்களும் நான்கு மகள்களும் இருந்தனர். நான்கு மகள்களில் மகேஸ்வரி இளையவள். சமீபத்தில் இறந்தவரின் மகளின் திருமணத்தில் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த உமா மகேஸ்வரி, கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அவர் தனது படுக்கையறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். ஜூப்ளி ஹில்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடல்நலக்குறைவு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இறப்புக்கான காரணம் பிரேத பரிசோதனை முடிவுக்கு பிறகே தெரியவரும் என்று தெரிவித்துள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான டக்குபதி புரந்தேஸ்வரியும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவின் மனைவியுமான நாரா புவனேஸ்வரி அவரது சகோதரிகள்.