சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கைது செய்தது அமலாக்கத்துறை- நடந்தது என்ன..?

சிவசேனா கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத்தை அமலாக்கப்பிரிவு நேற்று நள்ளிரவு முறைப்படி கைது செய்தது.

அவர் கைதுக்கு காரணம் என்ன, ஏன் கைது செய்யப்பட்டார் என்பது குறித்து இந்த செய்தி விளக்குகிறது.

மும்பை புறநகர் பகுதியான கோரேகான் பகுதியில் 672 தொகுப்பு வீடுகள் கட்ட ஒப்பந்தம் செய்த நிறுவனம் இதுவரை வீடுகட்டித் தரவில்லை. அந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவர் சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத்துக்கு உறவினர். இந்த நிலமோசடியில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டில், சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்டுள்ளார்.

சஞ்சய் ராவத் கைது செய்யப்படும் முன் அவரின் வீட்டில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் 9 மணிநேரம் ஆய்வு நடத்தி, ரூ11 லட்சத்தை பறிமுதல் செய்தனர். சஞ்சய் ராவத்தை அழைத்துக் கொண்டு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தங்கள் அலுவலகத்துக்கு சென்று விசாரித்தனர். ஏறக்குறைய 6மணிநேரம் விசாரணை நடத்தியதில் சஞ்சய் ராவத் விசாரணைக்கு ஒத்துழைக்காததையடுத்து, அவரை அமலாக்கப்பிரிவு கைதுசெய்தனர்.

இன்று மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் சஞ்சய் ராவத் ஆஜர்படுத்தப்பட்டு, அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் இன்று விசாரணைக்காக தங்கள் பாதுகாப்பில் எடுப்பார்கள்.

சஞ்சய் ராவத் கூறுகையில் ” நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அரசியல்ரீதியாகப் பழிவாங்கப்படுகிறேன்.நில மோசடி ஊழலுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை. நான் பதவிப்பிரமாணம் எடுத்த சிவசேனா தலைவர் பாலசாஹேப் தாக்கரே சத்தியமாகக் கூறுகிறேன். போராட எங்களுக்கு பால்தாக்ரே கற்றுக்கொடுத்துள்ளார், ஆதலால் நாங்கள் போராடுவோம்” எனத் தெரிவித்தார்.

கடந்த 2007ம் ஆண்டு மும்பைச் சேர்ந்த குருஆஷிஸ் கட்டுமான நிறுவனம், மகாராஷ்டிரா வீட்டுவசதி வாரியத்துடன் 672 வீடுகள் கட்டித்தர ஒப்பந்தம் செய்யதது.

மும்பையில் உள்ள புறநகரான கோரேகான் பகுதியில் பத்ரா சாவல் பகுதியில் 672 வீடுகள் கட்ட ஒப்பந்தம் செய்யப்பட்டது. புதிய வீடுகள் கட்டியதுபோக, மீதமுள்ள இடங்களை தனியார் கட்டுமானத்துக்கு விற்கவும் முடிவு செய்யப்பட்டது.

அமலாக்கப்பிரிவு கூற்றுப்படி, சஞ்சய் ராவத்தின் நெருங்கிய உறவினர் பிரவின் ராவத், குரு ஆஷிஸ் கட்டுமான நிறுவத்தின் இயக்குநர்களில் ஒருவர். இந்த கட்டுமான நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாக இதுவரை ஒருவீடுகூட கட்டித்தரவில்லை. ஆனால், அந்த இடத்தை கூறுபோட்டு தனியாருக்கு ரூ.901.79 கோடிக்கு விற்பனை செய்தது.

குரு ஆஷிஸ் கட்டுமான நிறுவனம் தி மிடோஸ் என்ற திட்டத்தைத் தொடங்கி வீடு தேவைப்படுவோரிடம் இருந்து ரூ.138கோடி வசூலித்தது. ஒட்டுமொத்தமாக ரூ.1,039.79 கோடி மோசடி நடந்துள்ளது என்று குற்றம்சாட்டப்படுகிறது.

சஞ்சய் ராவத்தின் நெருங்கிய உறவினர் பிரவீன் ராவத், தனது கட்டுமான நிறுவனத்துக்கும், மகாராஷ்டிரா வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடியை தனது உறவினர்கள், நண்பர்கள், நெருங்கிய தொழில்அதிபர்கள் வங்கிக்கணக்குகளில் மாற்றியுள்ளார். இதில் சஞ்சய் ராவத்தின் குடும்பத்தினர் வங்கிக்கணக்கிலும்அந்தப் பணம் வந்துள்ளது.

கடந்த 2010ம் ஆண்டில், பிரவீன் ராவத்தின் மனைவி மாதுரி ராவத்திடம் இருந்து ரூ.83 லட்சம் சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத் வங்கிக்கணக்கிற்கு மாற்றப்பட்டது. இந்தப் பணத்தின் மூலம் தாதர் பகுதியில் வர்ஷா ராவத் ஒருவீட்டை விலைக்கு வாங்கியுள்ளார். அமலாக்கப்பிரிவு விசாரணையில் வர்ஷாராவத், ரூ.55 லட்சத்தை மாதுரி ராவத்துக்கு மாற்றியுள்ளார். இதுபோல் பலமுறை பணப்பரிமாற்றம் நடந்துள்ளது.

வர்ஷா ராவத், சஞ்சய் ராவத்தின் நெருங்கிய உதவியாளர் சுஜித் பட்கரின் மனைவி ஸ்வப்னா பட்கர் பெயரில் அலிபாக் பகுதியில் உள்ள கிஹிம் கடற்கரைப் பகுதியில் 8 பிளாட் வாங்கப்பட்டுள்ளது. இந்த பிளாட்கள் வாங்கியதில், பத்திரப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையைவிட, அதிகமான தொகை ரொக்கமாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 1ம் தேதி சஞ்சய் ராவத்திடம் 10 மணிநேரம் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தினர். இது தவிர கடந்த ஏப்ரல் மாதம் வர்ஷா ராவத்துக்குச் சொந்தமான ரூ.11.15 கோடி சொத்துக்களை அமலாக்கப்பிரிவு முடக்கியது. அலிபாக் பகுதியில் உள்ள 8 பிளாட்களும் முடக்கப்பட்டன.