170 ஆண்டுகளில் முதல் முறையாக… கோவை அரசு கலைக்கல்லூரியில் சேர 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பம்.!

தமிழகத்தில் 163 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 1 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளது.

நடப்பாண்டில், கல்லூரியில் சேருவதற்கான ஆன்லைன் மூலம் விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து பி.ஏ, பி.காம், பி.எஸ்.சி உள்ளிட்ட படிப்புகளில் சேர மாணவர்கள் விண்ணப்பம் அளித்து வந்தனர். மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 7-ந் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகாத காரணத்தினால், மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சி.பி.எஸ்.இ பள்ளிகள் தேர்வு முடிவுகள் வந்த 5 நாட்கள் வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட் டுள்ள நிலையில், நேற்றும் பலர் விண்ணப்பித்தனர்.

கோவை அரசு கலைக்கல்லூரியில் நடப்பாண்டில் 26 பாடப்பிரிவுகளில் மொத்தம் 1,466 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த இடங்களுக்கு நேற்று வரை சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
கோவை அரசு கலைக் கல்லூரி தொடங்கப்பட்ட 170 ஆண்டுகளில், இந்த ஆண்டு தான் முதல் முறையாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.