ஓய்வூதியதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்… தபால்காரர்கள் மூலம் வீடு தேடி வருது டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் வழங்கும் திட்டம்..!!

கோவை முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை 1-ந் தேதி முதல் செப்டம்பர், 30-ந் தேதி வரை தபால்காரர் மூலம் வீடு தேடி சென்று உயிர்வாழ் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக தமிழக அரசுடன், இந்தியா போஸ்ட், பேமெண்ட்ஸ் வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. கொரோனோவால் கடந்த 2 ஆண்டுகளாக உயிர்வாழ் சான்றிதழ் அளிக்க விலக்கு அளிக்கப்பட்டது. தற்போது ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் உயிர்வாழ் சான்றிதழை சமர்பிக்கும்படி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டில் இருந்தபடி ஜீவன் பிரமான் திட்டத்தில், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் பெறலாம்.
இதற்கான கட்டணம் ரூ.70 செலுத்த வேண்டும். நேரில் சென்று வாழ்வுரிமை சான்று சமர்ப்பிக்க முடியாதவர்கள், தபால்காரரிடம் ஆதார், மொபைல் எண், பி.பி.ஓ எண், ஓய்வூதிய கணக்கு விபரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்தால், சில நிமிடங்களில், டிஜிட்டல்’ உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து விடலாம்.
இதனை தகுதியுடைய அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள அஞ்சலகங்களை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.