வெறும் 500 ரூபாய் கடனுக்காக.. ஒருவரை அடித்துக் கொடூர கொலை – பக்கத்து வீட்டுக்காரரின் வெறிச்செயல்..!

மேற்கு வங்கத்தில் வாங்கிய 500 ரூபாய் கடனைத் திருப்பித் தராதவரை பக்கத்து வீட்டுக்காரர் மூங்கில் தடியால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள கங்கா பிரசாத் காலனியைச் சேர்ந்தவர் பன்மாலி பிரமாணிக்(40). இவர் சில நாட்களுக்கு முன்பு பக்கத்து வீட்டைச் சேர்ந்த பிரபுல்லா ராயிடம் 500 ரூபாய் கடன் வாங்கியிருந்தார். குறிப்பிட்ட காலத்திற்குள் பணத்தைத் திருப்பித் தராததால் பன்மாலிற்கும், பிரபுல்லா ராயிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை தேநீர் கடையில் நண்பர்களுடன் பன்மாலி பிரமாணிக் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த பிரபுல்லா ராய், தான் கடன் கொடுத்த 500 ரூபாயைக் கேட்டதால் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த பிரபுல்லா ராய், மூங்கில் தடியால் பன்மாலியை சரமாரியாகத் தாக்கினார். இதனால் ரத்தவெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை நண்பர்கள், வீட்டிற்கு கொண்டு சென்றனர். அப்போது அவர் ரத்தவாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து பன்மாலியை உள்ளூரில் உள்ள முடிபுகூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின் மேல் சிகிச்சைக்காக மால்டாவுக்கு கொண்டு சென்றனர்.

ஆனால்,அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், பன்மாலி பிரமாணிக் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து பமோங்கோலா போலீஸில், பன்மாலி பிரமாணிக்கின் சகோதரர் அஜய் புகார் கொடுத்தார். இதையடுத்து பிரபுல்லா ராயை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர். 500 ரூபாய் கடனுக்காக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.