இந்தியாவில் விரைவில் வருகிறது பறக்கும் பேருந்து- அமைச்சர் நிதின் கட்கரி சூப்பர் அறிவிப்பு ..!

எரிபொருள் அதிகளவில் இந்தியாவில் செலவாகிறது. அதே சமயம் காற்று, ஒலி என அதிகளவில் இயற்கையை நாசம் செய்யும் நாடுகளிலும் இந்தியாவின் பங்களிப்பு அதிகமிருக்கிறது.

இன்னொரு புறம் டிராஃபிக் நெரிசல். வளர்ந்த நகரங்களில் ஒரு வீட்டிற்கு குறைந்தபட்சமாக இரண்டு வாகனங்களையாவது வைத்திருக்கிறார்கள். சைக்கிள் என்பதே பள்ளி மாணவர்களுக்கானது என்பது போல் உருமாறிவிட்டது. இந்நிலையில், இந்தியாவில் விரைவில் ‘ஸ்கை பஸ்’ எனப்படும் பறக்கும் பேருந்துகளை தொடங்க வாய்ப்பு இருப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

ஸ்கை பஸ்’ என்பது மெட்ரோ ரயில் போலவே இருக்கும் ஒரு ரயில்வே அமைப்பாகும். மணிக்கு சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த பேருந்துகளில் பயணிக்கலாம். எரிபொருளுக்கு மாற்றாக மின்சார ஆற்றலைப் பயன்படுத்தி இயக்கலாம். இதனால் நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வழித் தடங்களில் ஸ்கை பஸ் சேவை விரைவில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இது குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், “மாசுபாட்டுடன் கூடிய பொருளாதார வளர்ச்சி ஒரு நல்ல உத்தி அல்ல. மாசுபாட்டைக் குறைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் ஸ்கை பஸ்களை தொடங்க விரும்புகிறோம் ” என தெரிவித்துள்ளார்.

டெல்லி மற்றும் ஹரியானாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் விரைவில் இந்த சேவையை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இந்தியாவில் எரிபொருட்களின் இறக்குமதியை முற்றிலுமாக குறைப்பதே தனது கனவு என்றும் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்