திருச்சியில் தந்தை இறந்த துக்கம் தாங்காமல் வாலிபர் தற்கொலை.

 

திருச்சி ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அல்லாஹ் பிச்சை இவரது மகன் முஹம்மது ரியாஸ் தந்தை மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், உடல்நிலை சரியில்லாமல் இருந்த அல்லாஹ் பிச்சை, நேற்று உயிரிழந்தார்.
இந்நிலையில், தந்தையின் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்த மகன் ரியாஸ் தந்தை உயிரிழந்த துக்கம் தாங்காமல் மனம் உடைந்து காணப்பட்டுள்ளார். தொடர்ந்து தனது தந்தை மறைவை நினைத்து அவர் மனம் புழுங்கிகொண்டிருந்ததைப் பார்த்த அவரது உறவினர்கள், முஹம்மது ரியாஸை சாமாதான வார்த்தைகள் சொல்லி, மனதை தேற்றியுள்ளனர். இருந்தாலும், தந்தை இழப்பை நினைத்து மனம் வருந்திகொண்டிருந்த முஹம்மது ரியாஸ், மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அரிஸ்டோ மேம்பாலம் பகுதிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது, மேம்பாலத்திலிருந்து திடீரென அவர் கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அப்பகுதி மக்கள் ரியாஸை மீட்டு மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முஹம்மது ரியாஸ்
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ரியாஸ் உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீஸார், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர். முஹம்மது ரியாஸ் தனது தந்தை மீது அதிக பாசம் வைத்திருந்ததுதான் இந்த தற்கொலைக்கு காரணம் என்பது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதேபோல், முஹம்மது ரியாஸூக்கும் உடல்நலத்தில் சில பிரச்னைகள் இருந்ததாகவும், அதற்கு அவர் சிகிச்சை எடுத்து வந்ததாகவும் சொல்கிறார்கள். இந்த நிலையில், தனது தந்தையும் இறந்ததால், வாழ்க்கை மீது விரக்தி ஏற்பட்டு தற்கொலை செய்துகொள்ளும் முடிவை அவர் எடுத்திருக்க கூடும் என்று அவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். தந்தை இறந்த சோகத்தில் மகனும் உயிரிழந்த சம்பவம் திருச்சியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.