கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு – கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது..!

கோவை பெரியக்கடை வீதி அருகே உள்ள உப்பு மண்டியை சேர்ந்தவர் விஜய் (வயது 20). தங்க நகை தொழிலாளி.

சம்பவத்தன்று இவர் தான் வேலை பார்க்கும் கடையில் பணி செய்து கொண்டு இருந்தார். அப்போது கடைக்குள் வைசியாள் வீதியை சேர்ந்த கல்லூரி மாணவர் சிவமணிகண்டன் (19), சஞ்சய் ஆகியோர் அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் கடையில் இருந்த விஜயை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.500 பணத்தை பறித்து தப்பி ஓடினர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் 2 பேரும் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து விஜய் பெரியக்கடை வீதி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் தங்க நகை தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்த கல்லூரி மாணவர் சிவ மணிகண்டனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

சுந்தராபுரத்தை சேர்ந்தவர் நவநீதன் (32). இவர் தள்ளுவண்டி செருப்பு வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் காந்திபுரம் டவுன் பஸ் நிலையம் அருகே உள்ள பாரதியார் ரோட்டில் செருப்பு வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் தள்ளுவண்டியில் இருந்து ரூ.450 பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினார். இதனை பார்த்த நவநீதன் அந்த வாலிபரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மடக்கி பிடித்தார்.

பின்னர் அவரை காட்டூர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கேரள மாநிலத்தை சேர்ந்த அஜீஸ் (37) என்பது தெரிய வந்தது. போலீசார் இவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.