பொறியியல் மாணவர் சேர்க்கை… 2 லட்சத்தை நெருங்கும் விண்ணப்ப பதிவு.!!

2023 – 24 ஆம் கல்வியாண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு 2 லட்சத்தை நெருங்கியுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2023-24-ம் கல்வியாண்டில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மே 5-ந்தேதி தொடங்கியது. மாணவ, மாணவிகள் https://www.tneaonline.org, https://www.tndte.gov.in என்ற இணையதளங்கள் மூலம் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்து வருகின்றனர்.

மேலும், மாணவர்களின் வசதிக்காக மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சேவை மையங்களிலும் விண்ணப்பப் பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று ( மே 26) மாலை 6 மணி வரை பொறியியல் படிப்புகளில் சேர 1 லட்சத்து 94ஆயிரத்து 579 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. தொடர்ந்து விண்ணப்பித்து வருவதால் மாணவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி வரும் நிலையில், விண்ணப்பித்தவர்களில் 1லட்சத்து 44 ஆயிரத்து 954 பேர் கட்டணம் செலுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

அதிலும், 1 லட்சத்து 7 ஆயிரத்து 208 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருக்கின்றனர். பொறியியல் படிப்புக்கான விண்ணப்பப்பதிவு ஜூன் 4-ந்தேதியுடன் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான மாணவர்கள் கணினி அறிவியல், மெக்கானிக்கல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்திருப்பதாக பொறியியல் சேர்க்கைக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.