130 இன்ஸ்பெக்டர்.. 1030 எஸ்.ஐ.,க்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும்-கோவையில் சைலேந்திரபாபு தகவல்.!!

கோவை:கோவை மாநகரில், கவுண்டம்பாளையம், கரும்புக்கடை, சுந்தராபுரம் மற்றும் கோவை தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் (போத்தனுார்) என 4 புதிய போலீஸ் ஸ்டேஷன்களை, டி.ஜி.பி., சைலேந்திரபாபு நேற்று திறந்து வைத்தார்.அதன் பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:தமிழ்நாட்டில், 1574 போலீஸ் ஸ்டேஷன்கள் தற்போது உள்ளன.

கோவை மாநகரில், துடியலுார் மற்றும் வடவள்ளி போலீஸ் ஸ்டேஷன்கள், கோவை மாநகரில் இணைய உள்ளன. இதன் காரணமாக கோவை மாநகரின், போலீஸ் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை, 20 ஆக உயர்ந்துள்ளது.இணையவழி குற்றங்களுக்கு, 1930 எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும். இணைய வழி குற்றங்களை பொறுத்தவரை, அதிக பணம் முதலீடு செய்யும் வரை காத்திருந்து, ஆசை காட்டி ஏமாற்றுவார்கள்.நீங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தால் உடனடியாக, 1930 என்ற போன் எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும்.காவல்துறை சார்பில் ‘காவல் உதவி’ என்ற ‘ஆப்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், 66 வகையான உதவிகளை பெற முடியும்.

ஆனால் இந்த ஆப்பை, பலரும் பதிவிறக்கம் செய்யவில்லை.தமிழகத்தில், 130 இன்ஸ்பெக்டர்களுக்கு ஓரிரு மாதங்களில் பதவி உயர்வு வழங்கப்படும். அதனை தொடர்ந்து, 1030 எஸ்.ஐ.,க்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.கரூர் மாவட்டத்தில் வருமானவரித்துறை சோதனையின் போது அதிகாரிகளின் வாகனங்கள் சேதப்படுத்தியது குறித்த கேள்விக்கு, ”அதற்கு கரூர் மாவட்ட எஸ்.பி., விளக்கம் அளித்து விட்டார்,” என்றார். மாயமான போன், தங்கம், பணத்தை உரியவர்களிடம் ஒப்படைத்த டி.ஜி.பி.,கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட டி.ஜி.பி., சைலேந்திரபாபு, கோவை மாநகர போலீஸ் எல்லையில் மீட்கப்பட்ட, 134 அலைபேசிகள், 2 கிலோ தங்கம், ரூ.3 லட்சம் ரொக்கம், 7 லேப் டாப் ஆகியவற்றை, உரியவர்களிடம் ஒப்படைத்தார். கோவை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய, 81 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். பெண் போலீஸ் டிரைவர்களுக்கு வாகன லைசென்ஸ் வழங்கினார்.