எடப்பாடி மேல்முறையீடு… அடுத்த அதிரடியாக கேவியட் மனு தாக்கல் செய்த ஓபிஎஸ்.!!

அதிமுக பொதுக்குழு தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ள நிலையில் ஓபிஎஸ் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதிமுக தலைமை விவகாரத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து செயல்பட முடியாத நிலையில், இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ளார்.

அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நீதிபதிகள் எம். துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையீடப்பட்டது. தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல்முறையீடு மனுவை பட்டியலிடும்படி, ஈபிஎஸ் கூடுதல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமியின் அந்த கூடுதல் மனு வரும் 22ஆம் தேதி அன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு வழக்கில் தன் தரப்பு வாதத்தை கேட்ட பிறகே எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கூடிய கேவியட் மனு ஓ.பி.எஸ். தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி கூடுதல் மனுவுடன், ஓ.பன்னீர்செல்வத்தின் கேவியட் மனுவும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. திங்கட்கிழமையன்று எடப்பாடி பழனிசாமி மனு ஏற்கப்படும் பட்சத்தில், அடுத்த ஓரிரு நாட்களில் அவரது பிரதான மேல்முறையீடு மனு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.