லஷ்கர்-இ-தைபா (LeT) அமைப்பின் இணை நிறுவனர் அமீர் ஹம்சா, பாகிஸ்தானின் லாகூரில் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிடைத்த தகவல்களின்படி, லாகூரில் உள்ள ஒரு செய்தித் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு வெளியே அடையாளம் தெரியாத நபர்கள் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அவர், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
அமீர் ஹம்சா, பயங்கரவாதி ஹபீஸ் சயீதுடன் இணைந்து லஷ்கர்-இ-தைபாவை நிறுவினார். இந்தியாவில் நடந்த பல தாக்குதல்கள் உட்பட, பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளுடன் அவருக்குத் தொடர்பு இருந்து வருகிறது.
அமீர் ஹம்ஸா ஆப்கானிய முஜாஹிதீன்களின் மூத்த உறுப்பினர் ஆவார். தனது உணர்ச்சிமிக்க பேச்சுகளுக்கும் ஏராளமான எழுத்துக்களுக்கும் பெயர் பெற்ற இவர், ஒரு காலத்தில் லஷ்கர்-இ-தொய்பாவின் அதிகாரப்பூர்வ வெளியீட்டின் ஆசிரியராக இருந்தார். மேலும், 2002-ல் வெளியான ‘கஃபிலா தஃவத் அவுர் ஷஹாதத்’ (மதமாற்றம் மற்றும் தியாகத்தின் பேரணி) உட்பட பல நூல்களை எழுதியுள்ளார்.
அமெரிக்க கருவூலத் துறை, லஷ்கர்-இ-தைபாவை ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவித்து, அமீர் ஹம்ஸாவைத் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதியாகப் பட்டியலிட்டுள்ளது. அவர் லஷ்கர்-இ-தைபாவின் மத்தியக் குழுவில் பணியாற்றியதாகவும், நிதி திரட்டுதல், ஆள்சேர்ப்பு மற்றும் தடுத்து வைக்கப்பட்ட போராளிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் முக்கியப் பங்கு வகித்ததாகவும் நம்பப்படுகிறது.
2018-ல், லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய ஜமாத்-உத்-தாவா மற்றும் ஃபலாஹ்-இ-இன்சானியத் அறக்கட்டளை ஆகிய தொண்டு நிறுவனங்கள் மீது பாகிஸ்தான் அதிகாரிகள் நிதி நெருக்கடிகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, ஹம்சா லஷ்கர் அமைப்பிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, ஜம்மு மற்றும் காஷ்மீர் உட்பட பல பகுதிகளில் தீவிரவாத நடவடிக்கைகளைத் தொடரும் நோக்கில், ஜெய்ஷ்-இ-மன்கஃபா என்ற பெயரில் ஒரு பிரிவுக் குழுவை அவர் நிறுவியதாகக் கூறப்படுகிறது.







