கருப்பு முகக்கவசம் அணிந்து சட்டப்பேரவைக்கு அதிமுக உறுப்பினர்கள் வருகை..!

திர்கட்சித் தலைவர் பேசுவதை நேரலை வழங்காததைக் கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் இன்று கருப்பு மாஸ்க் அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை..
தமிழக சட்டப்பேரவையில் நேற்று பேசிய அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, “முதல்வர் பேசும் போது நேரலை ஒளிபரப்பாகிறது. ஆனால் தீர்மானத்தை கொண்டு வந்த எதிர்க்கட்சித்தலைவர் பேசும் போது மட்டும் நேரலை கட் செய்யப்படுகிறது . இதை யாரோ வேண்டுமென்றே செய்கிறார்கள். அவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார். நேரலையில் ஒளிபரப்பாகததை கண்டித்து நேற்று அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் பேசுவதை நேரலை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த சபாநாயகர், நிகழ்ச்சி நிரலில் உள்ள அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பப்படுவதாக குறிப்பிட்டார். மற்றவை கடந்த காலங்களில் உள்ள நடைமுறைப்படி முடிவு செய்யப்படும் என கூறினார். கவன ஈர்ப்பு தீர்மானமும் நேரலை செய்யப்படுகிறது என்றும், வரும் நாட்களில் அனைத்தும் படிப்படியாக நேரலை செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் எதிர்கட்சித் தலைவர் பேசுவதை நேரலை வழங்காததைக் கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் இன்று கருப்பு மாஸ்க் அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தொடர்ந்து நிராகரிக்கும் ஜனநாயக விரோத போக்கை கண்டித்தும். எதிர்க்கட்சிகள் மக்கள் பிரச்னையை எழுப்பும்போது ஊடகங்களுக்கு பேரவையின் நேரடி ஒளிபரப்பை வழங்காமல் ஜனநாயக குரல்வளையை நெரிக்கும் போக்கை கண்டித்தும் கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளில் அரசின் அலட்சியப் போக்கை கண்டித்தும் கருப்பு முக கவசம் அணிந்து வந்துள்ளதாக தெரிவித்தனர்.