கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை தீவிரப்படுத்த கோரி ஓபிஎஸ் ஆர்ப்பாட்டத்தில் கைகோர்க்கும் டிடிவி.தினகரன்..!

சென்னை: கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை தீவிரப்படுத்த கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கலந்து கொள்கிறார் என அமமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அமமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொடநாட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கை தீவிரப்படுத்தக் கோரி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் ஆகஸ்ட் 1ம் தேதி காலை 10.30 மணியளவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் கண்டன ஆர்பாட்டங்களை நடத்த உள்ளனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அமமுக தனது ஆதரவை தெரிவித்திருந்த நிலையில், தேனியில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பங்கேற்க உள்ளார்.

தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் அந்தந்த மாவட்டத்தை சார்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், மாநில, மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் பெருந்திரளாக ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.