கோவையில் அதிகரிக்கும் போதை பயன்பாடு: அரசு ஆஸ்பத்திரியில் போதை ஒழிப்பு மையத்தை விரிவுப்படுத்த திட்டம்- டீன் நிர்மலா தகவல்..!

கோவை அரசு ஆஸ்பத்திரியில் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு
சிகிச்சை அளித்து மீண்டும் புது வாழ்வை மீட்டெடுக்கும் வகையில் போதை
ஒழிப்பு மையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், ஆலோசனைகள், வழிகாட்டல் பயிற்சி
உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மூலம் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள்
மீட்கப்படுகின்றனர். இந்நிலையில் கோவையில் போதை பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அரசு ஆஸ்பத்திரியில் செயல்பட்டு வரும் போதை ஒழிப்பு மையத்தை விரிவாக்கம் செய்ய ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர்
திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா கூறியதாவது:-
போதை பழக்கத்துக்கு அடிமையாகி சிகிச்சைக்காக போதை ஒழிப்பு மையத்தில்
அனுமதிக்கப் படுபவர்களுக்கு குறைந்தபட்சம் 15 முதல் 30 நாள்கள் வரை
சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருந்துகளுடன், இயற்கை மருத்துவ சிகிச்சை
முறைகள், யோகாசனம், தியானம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளும்
அளிக்கப்படுகிறது.

தினமும் மனநல ஆலோசகர் மூலம் கவுன்சிலிங் வகுப்புகளும் நடத்தப்படுகிறது.
ஆரம்பத்தில் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொள்வார்கள் தொடர் பயிற்சியின்
மூலம் அமைதியான மன நிலைக்கு திரும்புகின்றனர். தற்போது இந்த மையத்தில்
10-க்கும் குறைவானவர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஒரு மாதம் வரை தங்கி சிசிச்சைப் பெற வேண்டியுள்ளதால் பெரும்பாலானவர்கள் சிகிச்சைக்கு வர மறுக்கின்றனர். சிலர் பாதியிலே தப்பிக்கவும் முயற்சிக்கின்றனர். இவர்களுக்கு உரிய ஆலோசனைகள் அளிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தற்போது 10-க்கும் குறைவான படுக்கை வசதியுடன் செயல்படும் மையத்தை
விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. படுக்கைகளின் எண்ணிக்கை 30 ஆக
அதிகரிக்கப்படும். மேலும் சிகிச்சை பெறுபவர்களை உற்சாகமாக வைத்துகொள்ளும்
விதமாக தொலைக்காட்சி, விளையாடும் வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
தவிர டாக்டர்கள், மருத்துவப் பணியாளர்கள் எண்ணிக்கையும்
அதிகரிக்கப்படும். விரைவில் போதை ஒழிப்பு மையம் விரிவாக்கம் செய்யப்பட்டு
புதிய பொலிவுடன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.