மிஸ் பண்ணிடாதீங்க… மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள்..!

மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள். இனி கால அவகாசம் வழங்கப்படாது என மின்வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலையிலான மின்சாரத்தைப் பயன்படுத்தும் மின் நுகர்வோர் 2.67 கோடி பேர் உள்ளனர். இலவசம், மானியம் பெறும் பயனாளிகளின் விவரங்களை ஆதார் எண்ணுடன் இணைக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, நுகர்வோரின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை கடந்த ஆண்டு நவம்பர் 15-ம் தேதி மின் வாரியம் தொடங்கியது.

ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும் முடியும் என அரசின் தரப்பில் கூறப்பட்டது. இதனையடுத்து ஆதார் எண்ணை இணைக்க தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பு முகாமும் நடத்தப்பட்டது. டிசம்பர் 31ம் தேதிவரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் மேலும் இரண்டு முறை கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டது.

ஆனால் அப்போதும் 7 லட்சம் பேர் இணைக்காமல் இருந்ததன் காரணமாக கால அவகாசம் பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் நடமாடும் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டது. இதுவரை 99 சதவீதம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாளாகும். இனி கால அவகாசம் வழங்கப்படாது என மின்வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.