டிகேஎம் 9 நெல்லினை கொள்முதல் செய்வதை கைவிட வேண்டும்- தமிழக அரசு உத்தரவு.!!

தமிழகத்தில் 2022 – 23 பருவத்திலிருந்து டிகேஎம் 9 நெல்லினை கொள்முதல் செய்வதை கைவிட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக நெல் கொள்முதலில் செய்யப்பட உள்ள மாற்றங்கள் குறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சில இடங்களில் டிகேஎம்9 சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த நெல்லினை அறுவை செய்து பெறப்படும் அரிசி சிவப்பு நிறத்தில் சற்று பருமனாக இருப்பதால், இந்த அரிசியினை பொது வினியோக திட்டத்தின் கீழ் பொதுமக்கள் வாங்குவதற்கு விருப்பம் காட்டவில்லை. டிகேஎம்9 ரக நெல் சாகுபடி செய்யப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கூட இந்த அரிசியை பயன்படுத்த தயங்குகின்றனர்.

இந்நிலையில் இந்த ரக அரிசியை பொது விநியோக திட்டத்தின் கீழ் பொது மக்கள் விரும்பாத நிலையில் விநியோகிப்பதை தவிர்க்கலாம் என அரசு முடிவு செய்து வரும் 2022-23 பருவத்திலிருந்து நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலமாக டிகேஎம்9 நெல்லினை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதை தமிழக அரசு கைவிட அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் தற்போது சந்தையில் புழக்கத்தில் இருக்கும் பிற சன்ன ரக நெல் வகைகளை விவசாயிகள் சாகுபடி செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.