காட்டு யானை தாக்கி மாற்றுத்திறனாளி விவசாயி பலி – வனத்துறையினர் விசாரணை.!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியை ஒட்டி புதுவடவள்ளி அட்டமொக்கை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி ( 70). மாற்றுத் திறனாளி விவசாயியான ராமசாமியின் விவசாயத் தோட்டம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் இரவு நேரத்தில் இவரது தோட்டத்திற்கு நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவது வழக்கம். இந்த நிலையில் அதிகாலை தோட்டத்து வீட்டில் ராமசாமி உறங்கிக் கொண்டிருந்தபோது அவரது நாய் வெளியே குரைக்கும் சத்தம் கேட்டு எழுந்த ராமசாமி விவசாயத் தோட்டத்திற்குள் காட்டு யானை நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது காட்டு யானையை விரட்டுவதற்காக சத்தம் போட்டபடி ராமசாமி தோட்டத்திற்குள் சென்றபோது திடீரென காட்டு யானை ராமசாமியை துரத்தி தாக்கி தும்பிக்கையால் தூக்கி வீசியது. இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கம் இருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து காட்டு யானையை விரட்டியடித்தனர். இதைத் தொடர்ந்து படுகாயமடைந்த ராமசாமியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராமசாமியை பரிசோதித்த மருத்துவர் இறந்துவிட்டதாக தெரிவித்ததையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாற்றுத்திறனாளி விவசாயி காட்டு யானை தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே யானை தாக்கி பலியான ராமசாமியின் குடும்பத்தினருக்கு வனத்துறை சார்பில் முதற்கட்ட நிவாரணமாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. யானை தாக்கி உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு வனத்துறை சார்பில் இழப்பீடாக 5 லட்சம் வழங்கப்படும் நிலையில் மீதமுள்ள தொகை ஆவணங்கள் சமர்ப்பித்து  பின்னர் வழங்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.