இலங்கை புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்பு..!

கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தனவை நியமனம் செய்து அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார்.நம் அண்டை நாடான இலங்கை, கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. அன்னியச் செலாவணி கையிருப்பு இல்லாததால், பெட்ரோல், டீசல் வாங்க முடியாமல் இலங்கை திண்டாடுகிறது. இதனால், மின் உற்பத்தி தடை, விலைவாசி உயர்வு என, மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்தப் பிரச்னைகள் தீவிரமடைந்ததால், அரசுக்கு எதிராக மக்கள் கொந்தளித்தனர். இதனால், அதிபர் கோத்தபய ராஜபக்சே, அவருடைய சகோதரர்களான பிரதமர் மகிந்த ராஜபக்சே, நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே பதவி விலகினர்.

கோத்தபய சிங்கப்பூருக்கு தப்பி ஓடினார். இதைத் தொடர்ந்து, பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கே, தற்காலிக அதிபரானார்.இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூலை 20) நடந்த அதிபர் பதவிக்கான ஓட்டெடுப்பில் ராஜபக்சே சகோதரர்களின் இலங்கை பொதுஜன பெரமுணா கட்சியின் ஆதரவுடன், புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து நேற்று அவர் இலங்கையின் 8வது அதிபராக பதவியேற்றார். இதனால், காலியாக உள்ள பிரதமர் பதவிக்கு தினேஷ் குணவர்தனவை நியமித்து அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார். அவருக்கு பதவி பிரமாணமும் செய்து வைத்தார்.