தமிழக காவல்துறையில் ‘ஸ்மார்ட் காவலர்’ செயலி- டிஜிபி சைலேந்திரபாபு அறிமுகம்..!!

சென்னை: போலீஸாரின் செயல் திறனை மேம்படுத்தவும், குற்ற ஆவணங்களை துல்லியமாக பதிவு செய்யவும், பராமரிக்கவும் தமிழக காவல்துறையில் ‘ஸ்மார்ட் காவலர்’செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.

சர்வதேச தரத்திலான தொழில் நுட்பத்தை புகுத்தி காவல் துறையை நவீன மயமாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக காவல் துறையினரின் செயல் திறனை மேம்படுத்தவும், குற்ற ஆவணங்களை துல்லியமாக பதிவு செய்யவும், பராமரிக்கவும் தரவுகளை முறையாகவும், சிறப்பாகவும் கையாளவும் ‘ஸ்மார்ட் காவலர்’ என்ற புதிய செயலியை டிஜிபி சைலேந்திரபாபு டிஜிபி அலுவலகத்தில் நேற்று தொடங்கி வைத்தார்.

ஸ்மார்ட் காவலர் (E-Beat)செயலி காவல் துறையில் களப்பணியாற்றும் அலுவலர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காகவும், களப் பணியின்போது நிகழும் சம்பவங்களை உடனுக்குடன் பதிவு செய்வதற்காகவும், கள அலுவலர்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டாலோ அல்லது உடனடி உதவி தேவைப்பட்டாலோ அதுகுறித்த செய்தியினை உடனடியாக உயர் அலுவலர்களுக்கு தெரிவிக்க ஏதுவாக இந்த செயலி இருக்கும். இந்த புதிய செயலி காவல்துறை நிர்வாகத்திலும், பொது மக்களின் சேவையிலும் ஒரு மைல் கல்லாக அமையும் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.