வெறும் 20 ரூபாய்க்கு பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் – குஷியில் பக்தர்கள்.!!

ழனி முருகன் கோயிலில் 200 கிராம் அளவில் பஞ்சாமிர்தம் விற்பனையை உணவுதுறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்.

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். இதையடுத்து, தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனி கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

இவ்வாறு வருகை தரும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதமாக பஞ்சாமிர்தம் வழங்கப்படுகிறது. பழனி என்றாலே பஞ்சாமிர்தம் தான் முதலில் நினைவிற்கு வரும். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆர்வமுடன் பஞ்சாமிர்தத்தை வாங்குவார்கள்.

இதையடுத்து, பழனியில் உள்ள கோயில் பஞ்சாமிர்த விற்பனை நிலையத்தில், தற்போது பிளாஸ்டிக் டப்பாவில் 450 கிராம் பஞ்சாமிர்தம் ரூ.40-க்கும், தகர டப்பாவில் ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் மினி டப்பாவில் பஞ்சாமிர்தம் விற்பனை செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

பக்தர்கள் கோரிக்கை கருத்தில் கொண்டு 200 கிராம் பஞ்சாமிர்தத்தை மினி டப்பாவில் ரூ.20-க்கு விற்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, 200 கிராம் பஞ்சாமிர்தம் ரூ.20-க்கு விற்பனை தொடக்க நிகழ்ச்சி, பழனி முருகன் கோயிலில் நேற்று நடைபெற்றது. இதில், உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்துகொண்டு, ரூ.20-க்கு பஞ்சாமிர்தம் விற்பனையை தொடங்கி வைத்தார்..