சாலை பணியாளர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் – எ.வ.வேலு எச்சரிக்கை.!

ரோடு: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சாலைப் பணியாளர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

பதவி உயர்வு, முன்னுரிமை பட்டியல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஈரோடு மாவட்டம் கோபியில் கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் 6-வது நாளாக காத்திருப்புப் போராட்டம் நடந்து வரும் நிலையில், கோபி வட்டாட்சியர், கோட்டாட்சியர் ஆகியோருடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், போராட்டம் தொடர்வதாக சாலைப் பணியாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

 இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை கோபி கோட்ட பொறியாளரைக் கண்டித்து, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பும் இன்று (மே 10) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அரசு ஊழியர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சாலைப் பணியாளர்களை நியமனம் செய்யும்போதே, சாலைப் பணிகளுக்குத் தான் நியமனம் செய்யப்படுகின்றனர். பதவி உயர்வு இல்லை என்பதும் விதிகளின் அடிப்படையில் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கோபியில், சங்கம் என்ற பெயரில் சாலைப் பணியாளர்களை தூண்டிவிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சாலைப் பணியாளர்கள் பணிக்கு திரும்பவில்லை என்றால் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

நெடுஞ்சாலைத் துறையில் 2003-ம் ஆண்டுக்கு பின்னால் பணியில் சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு அளிக்கக் கூடாது எனவும், தமிழ்நாடு சர்வீஸ் கமிஷன் மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கவேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை தமிழக அரசு ஆய்வு செய்து வருகிறது. ஆய்வின் முடிவில் முதல்வர் ஆணையின்படி பதவி உயர்வு வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.