கோரமண்டல் ரெயில் விபத்து… நடந்தது எப்படி- முழு விவரம் இதோ.!!

தமிழ்நாடு-மேற்கு வங்காளம் இடையே இயக்கப்படும் அதிவேக ரெயில்களில் ஒன்றான இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.

இந்த ரெயில் நேற்று மாலையில் ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு கிளம்பியது. இரவு சுமார் 7 மணி அளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே வேகமாக வந்து கொண்டிருந்தது.

அப்போது அருகில் உள்ள மற்றொரு தண்டவாளத்தில் பெங்களூருவில் இருந்து மேற்கு வங்காளத்தின் ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு இருந்தது. அந்த ரெயிலின் சில பெட்டிகள் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்த தண்டவாளத்தில் விழுந்து கிடந்தன.

இதனால் எதிர்பாராத விதமாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த பெட்டிகள் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரசின் 10பெட்டிகள் தடம் புரண்டு 3-வது தண்டவாளத்தில் விழுந்தன.

அந்த பெட்டிகள் பலத்த சேதம் அடைந்ததுடன், அதில் இருந்த ஏராளமான பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதில் பலரும் பலத்த காயம் அடைந்து வலியால் துடித்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்கள் தங்களை காப்பாற்றுமாறு அலறினர்.

இந்த பயங்கரத்தில் மற்றொரு பேரிடியாக, தடம்புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரசின் சில பெட்டிகள் 3-வது தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த சரக்கு ரெயில் ஒன்றின் மீது மோதின. இதில் அந்த பெட்டிகள் மேலும் சேதம் அடைந்ததுடன், அதில் சிக்கியிருந்த பயணிகளின் நிலையும் மோசமானது.

இவ்வாறு 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதியதால் அந்த பகுதி முழுவதுமே அதிர்ந்தது. சில நிமிடங்களுக்குள் அரங்கேறிய இந்த விபத்தால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.

விபத்து குறித்து தகவல் அறிந்த சுற்றுவட்டார மக்கள் உடனே அங்கே விரைந்து சென்றனர். அப்போது அந்த பகுதி முழுவதும் மக்களின் மரண ஓலமும், ரெயில் பெட்டிகளின் குவியலுமாக கோரமாக காட்சி அளித்தது.

அதேநேரம் சம்பவ இடம், அதிக மக்கள் வாழிடம் இல்லாத வனம் சார்ந்த ஒதுக்குப்புறமான பகுதி என தெரிகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் காரிருள் சூழ்ந்திருந்தது. இந்த விபத்தில் சிக்கிய ரெயில்களின் 10-க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தன. அவை ஒன்றுடன் ஒன்று மோதி உருக்குலைந்து உள்ளன.

இந்தநிலையில், இதுவரை 233 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஒடிசா தலைமை செயலாளர் பிரதீப் ஜேனா தகவல் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ தாண்டியது. விபத்து நடந்த இடத்தில் விடிய, விடிய மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரெயில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ரத்தம் வழங்க பாலசோர் மருத்துவமனையில் தன்னார்வலர்கள் குவிந்துள்ளனர்.நீண்ட வரிசையில் காத்திருந்து ரத்தம் வழங்கி உதவி செய்து வருகின்றனர்…