கோவையில் தொடரும் சந்தன மர கடத்தல் சம்பவம்- கும்பல் 5 பேர் கொண்ட கும்பலை பிடித்து போலீசார் விசாரணை..!

கோவையில் ரேஸ்கோர்ஸ், அரசு ஊழியர்கள் குடியிருப்பு, பங்களாக்கள் உள்ளிட்ட இடங்களில் சந்தன மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கோவை நகரில் பல இடங்களில் சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி சென்றனர். குறிப்பாக பாதுகாப்பு மிகுந்த ரேஸ்கோர்ஸில் உள்ள கலெக்டர் பங்களாவில் சந்தனமரம் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் சந்தன மர கடத்தல் கும்பலை சேர்ந்த 5 பேர் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது 5 பேர் கும்பலை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததை அடுத்து அவர்களை ஆர்.எஸ். புரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் 5 பேரும் சந்தன மர கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் சந்தன மர கடத்தல்காரர்கள் சத்தியமங்கலம் ரோட்டை சேர்ந்த செல்வகுமார் (வயது 37), திருப்பூர் நெசவபாளையம் காலனியை சேர்ந்த செந்தில்குமார், பீகாரை சேர்ந்த மிஸ்பர்(29), ஈரோடு மாவட்டம் தாளவாடியை சேர்ந்த ஹீமாயூன் (70), சத்தியை சேர்ந்த முகமது அலி ஜின்னா(30) என்பது தெரிய வந்தது போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் 5 பேரும் கோவையில் எங்கெல்லாம் சந்தன மரத்தை வெட்டி கடத்தியுள்ளனர்? ரேஸ்கோர்ஸ் கலெக்டர் பங்களாவில் சந்தன மரம் கடத்தப்பட்டதற்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என பல்வேறு கோணங்களில் ஆர்.எஸ். புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.