இடிந்து விழுந்த சுற்று சுவர்கள்.. குண்டும் குழியுமான சாலை.. மெல்ல, மெல்ல பொலிவிழக்கும் ரோஜா பூங்கா.. மீண்டும் புத்துயிர் பெறுமா..? ரோஜா விரும்பிகள் எதிர்பார்ப்பு..!

ஊட்டி: தமிழக மக்கள் சுற்றுலா செல்லவேண்டும் என்றால் அவர்களின் முதல் விருப்பமாக நீலகிரி மாவட்டம் தான் இருக்கும்.

இயற்கையின் மொத்த அழகையும் அங்கு கண்டு வியந்து ரசிக்கலாம். வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு படையெடுப்பர்.
அப்படி வருபவர்களின் முதல் விருப்பம் ஊட்டி தாவிரவியல் பூங்கா. அடுத்த இடத்தில் படகு இல்லம் மற்றும் ரோஜா பூங்கா ஆகியவை உள்ளன
1995ஆம் ஆண்டு ஊட்டி மலர் கண்காட்சியின் 100-வது ஆண்டு நினைவாக ஊட்டி அரசு ரோஜா பூங்கா தொடங்கப்பட்டது. இந்த பூங்கா தோட்டக்கலைத்துறை மூலம் பராமரிக்கப்படுகிறது.

இங்கு 31 ஆயிரத்து 500 ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. 5 அடுக்குகளை கொண்ட இந்த தோட்டம் 4 ஹெக்டர் பரப்பில் அமைந்துள்ளது. இப்பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள ரோஜா ரகங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு தற்போது 4,201 வீரிய ரக ரோஜா ரகங்களில் சுமாா் 31,500 ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
2006-ம் ஆண்டில் உலக ரோஜா சங்க சம்மேளனம் இந்த ரோஜா பூங்காவுக்கு உலக அளவில் சிறந்த ரோஜா பூங்கா என்ற விருதை வழங்கி சிறப்பித்துள்ளது. நீலகிரி மாவட்டத்துக்கும், தமிழகத்துக்கும் மட்டுமின்றி இந்திய நாட்டுக்கும் பெருமை வாய்ந்ததாக அமைந்துள்ள இப்பூங்கா, தென்கிழக்கு ஆசியா நாடுகளிலேயே மிக அதிகமான ரோஜா ரகங்களை கொண்ட பூங்காவாக திகழ்கின்றது.

இத்தனை சிறப்புகள் கொண்ட சுற்றுலா பயணிகளை கவர்ந்து வரும் ரோஜா பூங்கா தற்போ து மெல்ல மெல்ல தன் அழகை இழந்து வருகிறது பூங்காவின் நுழைவு பகுதியிலேயே சாலையானது குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதுதவிர பூங்காவுக்கு செல்லக்கூடிய சாலையில் பல இடங்களில் குழிகள் காணப்படுகின்றன. மேலும் பூங்காவின் சுற்று சுவரும் சில இடங்களில் இடிந்து விழுந்து உள்ளது. ஆனால் அைவ இதுவரை சீரமைக்கப்படாமல் உள்ளது. பூங்கா அருகே உள்ள வாகன நிறுத்தத்தின் சுற்றுசுவரும் இடிந்து விழுந்துள்ளது.

பழைய அலங்கார் தியேட்டர் சாலையில் இருந்து ரோஜா பூங்கா வரும் நடைபாதை பல இடங்களில் இடிந்து காணப்படுகிறது. பல லட்சகணக்கான வருமானம் வரும் சுற்றுலா பயணிகளின் விருப்பமாக உள்ள ரோஜா பூங்கா மெல்ல மெல்ல தனது பொலிவை இழந்து வருவது சுற்றுலா பயணி கள் மற்றும் உள்ளூர் பயணிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலா பயணிகள் விருப்பமான இடமான ரோஜா பூங்காவை பொலிவு படுத்த வேண்டும் என்பதே ரோஜா விரும்பிகளின் விருப்பமாக உள்ளது.