தங்க புதையலுக்கு ஆசைப்பட்டு ரூ.10 லட்சம் இழந்த கோவை வியாபாரி:போலி நகைகளை கொடுத்து நூதன மோசடி..!!

கோவை மாவட்டம்’ கருமத்தம்பட்டி அருகே உள்ள வாகராயம்பாளையத்தைச் சேர்ந்தவர் சதாசிவம் (வயது 48) வியாபாரி. இவர் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனிடம் நேற்று ஒரு புகார் மனு கொடுத்தார் .

அதில் அவர் கூறியிருப்பதாவத:- எனது கடைக்கு பொருட்கள் வாங்க அடிக்கடி வரும் வாலிபர் ஒருவர் தனது நண்பருடன் வந்தார். அவர்கள் கோவையில் ஒரு கல்லூரியில் படித்து வருவதாகவும் விடுமுறை நாட்களில் வீட்டுக்கு அஸ்திவாரம் தோண்டு வேலைக்கு சென்ற போது புதையலாக 1 கிலோ தங்க நகை கிடைத்ததாகவும் கூறினர். எங்களுக்கு கல்லூரி கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதால் புதையலில் கிடைத்த 1 கிலோ தங்க நகையை ரூ. 10 லட்சத்துக்கு விற்க போவதாக கூறினர். அதை நம்பி நானே வாங்கிக் கொள்கிறேன் ஒரு வாரம் கழித்து வாருங்கள் என்று கூறினேன். அதன்படி அவர்கள் புதையலில் கிடைத்தது என்று சிறிய நகையை என்னிடம் கொடுத்தனர். அதை பரிசோதித்துப் பார்த்தபோது ஒரிஜினல் தங்கம் என்பது தெரியவந்தது, இதை யடுத்து ஒரு வாரம் கழித்து வந்த அவர்கள் என்னிடம் ரூ. 10 லட்சம் வாங்கிக் கொண்டு தங்க நகையை கொடுத்தனர். இதை யாரிடமாவது சொன்னால் அரச அதிகாரிகள் வாங்கி சென்று விடுவார்கள் என்று கூறிவிட்டு சென்றனர். இதைத்தொடர்ந்து அந்த வாலிபர்கள் கொடுத்த நகைகளை பரிசோதனை செய்து பார்த்தபோது போலியான பித்தளை நகை என்பது தெரிய வந்தது .தன்னை ஏமாற்றி அவர்கள் ரூ 10 லட்சத்தை மோசடி செய்து தப்பிச் சென்று விட்டனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.