கோவை ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி – போதை ஆசாமி கைது..!

கோவை ஒண்டிபுதூர் பஸ் நிறுத்தம் அருகே தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் உள்ளது. இங்கு நேற்று அதிகாலையில் மர்ம ஆசாமி ஒருவர் புகுந்து ஏடிஎம் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளார். இதனால் கொச்சியில் உள்ள வங்கியின் பிரதான அலுவலகத்தில் எச்சரிக்கை மணி ஒலித்தது. இதையடுத்து அந்த அலுவலக அதிகாரி கோவையில் உள்ள அந்த தனியார் வங்கி கிளை மேலாளருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அங்கு சென்ற மேலாளர் அந்த ஏடிஎம் எந்திரத்தை ஆய்வு செய்தார். அப்போது எந்திரத்தில் பணம் வைக்கும் பெட்டகம் உள்ள அறையின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே கோவை சிங்காநல்லூர் போலீசருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர் . இதில் ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முயன்றவர் திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த வேலுச்சாமி ( வயது 19) என்பது தெரிய வந்தது. இதை யடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் குடிபோதையில் இருந்த அவருக்கு மேலும் மது குடிக்க பணம் இல்லாததால் ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயனறதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.