கோவை ஆயுதப்படை போலீசாரின் கவாத்து பயிற்சி இன்று நிறைவு..!

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அறிவுரையின் படி, மாநகர ஆயுதப்படைப்பிரிவில் பணியாற்றும் போலீசாருக்கு கடந்த 9-ந் தேதி வருடாந்திர படை திரட்டு கவாத்து பயிற்சி போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் தொடங்கியது.

இந்த பயிற்சியில் போலீசாருக்கு நவீன ஆயுதங்களை கையாளுதல், கண்ணீர் புகை குண்டுகளை கையாளுதல், கலவர கூட்டத்தை கலைத்தல், அணிவகுப்பு கவாத்து, பாதுகாப்பு பணிகள், மன நலம் மற்றும் உடல் நலத்தை பேணுதல், ஆரோக்கியமான உணவு முறை போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சியில் 550 போலீசார் பங்கேற்னர். இந்த பயிற்சி இன்றுடன் நிறைவு பெற்றது.

நிறைவு நாளான இன்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆயுதப்படை போலீசாரின் அலங்கார அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு அணிவகுப்பு கவாத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் மாநகரில் பயன்பாட்டில் இருந்து வரும் அனைத்து போலீஸ் வாகனங்களையும் ஆய்வு செய்தார். பின்னர் போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். மேலும் போலீசாரிடம் தேவைகளை கேட்டறிந்தார். அவரிடம் போலீசார் பல்வேறு தேவைகளை முன் வைத்தனர். இது குறித்து பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஆயுதப்படை துணை கமிஷனர் முரளிதரன், உதவி கமிஷனர் சேகர், இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தராஜூ, பிரதாப் சிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.