கோவை ஏவுகணை உற்பத்தி தொழிற்சாலை இடமாற்றம்: ரூ.100 கோடி பணி ஆணைகள் பாதிப்பு- தொழில்துறையினர் தகவல்..!

கோவை: மும்பையை தலைமையகமாக கொண்டு செயல்படும் பிரபல தனியார் நிறுவனம் கோவை மாவட்டம் செட்டிபாளையம் அருகே ஏவுகணை உற்பத்தி தொழிற்சாலையை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் அமைத்தது.

தேஜஸ் போர் விமானத்தின் இறக்கைகள் மற்றும் இந்திய ராணுவம் உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏவுகணைகள் தயாரிக்கும் பணிஆணைகளை பெற்று செயல்பட்டு வந்தது.
பீரங்கி தாக்குதல்களை எதிர்க்கும் ஏவுகணை, கடல்சார் ஏவுகணை உள்ளிட்ட பல்வேறு விதமான ஏவுகணைகள் கோவையில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டன. இது தவிர வால்வ், பொறியியல் பொருட்கள் உள்ளிட்ட பல வகையான பொருட்கள் உற்பத்தி பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதனால் சிறு நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் பணி ஆணைகள் கிடைத்தன. இந்நிலையில் அந்த நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இதனால் தொழில்துறையினர் மிகந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு சிறு, குறு தொழில் நிறுவனங்களின் அமைப்பினர் கூறியதாவது:-
கோவையில் செயல்பட்டு வந்த ஏவுகணை உற்பத்த தொழிற்சாலை வளாகத்தில் ஏவுகணை உள்ளிட்ட அனைத்து வகை உற்பத்தி பிரிவு தொழில்களுக்கு மாற்றமாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
கோவையில் உள்ள பல சிறு தொழில் நிறுவனங்கள் ஏவுகணை உற்பத்தி தொழிற்சாலையில் இருந்து பணி ஆணைகள் பெற்று வந்தன. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டால் போக்குவரத்து செலவு உள்ளிட்ட நிதிசுமை அதிகரிக்கும்.
இதனால் பெரும்பாலான கோவை தொழில்முனைவோர் பணிஆணை பெற ஆர்வம் காட்ட மாட்டார்கள். இந்த இடமாற்றத்தால் கோவையில் ரூ.100 கோடி மதிப்பிலான பணிஆணைகள் சிறு தொழில் நிறுவனங்களுக்கு பாதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தார்.