கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் புகுந்து உணவை ருசி பார்த்த ஒற்றை ஆண் யானை – அலறி அடித்து ஓட்டம் பிடித்த காவலாளிகள்.!

கோவை மாவட்டம் மேற்கு மலைத் தொடர்ச்சி பகுதியான கனுவாய், மருதமலை
அடிவாரம் , யானை மடுவு, அட்டுக்கல் உள்ளிட்ட பகுதியில் கடந்த சில
தினங்களாக ஒற்றை யானை ஒன்றும், குட்டிகளுடன் 17 யானைகளும், 2 பிரிவாக
இரவு நேரங்களில் ஊருக்குள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து
பயிர்களை தின்று சேதப்படுத்தி வந்தது.
அதில் சுமார் 15 வயது மதிக்கதக்க ஒற்றை ஆண் யானை தனியாக குப்பேபாளையம்
பகுதி மற்றும் அட்டுக்கல் கெம்பனூர் ஆகிய பகுதிகளில் ஊருக்குள் புகுந்து
வீடுகள் மற்றும் கடைகளை உடைத்து அங்கு இருக்கும் அரிசி மற்றும்
உணவுப்பொருட்களை தின்று வந்தது.
இந்த நிலையில் இந்த யானை மருதமலைப் பகுதிக்கு இடம் பெயர்ந்தது. அங்கு
இரவு நேரங்களில் உலா வந்த வண்ணம் இருந்தது. அப்போது யானை கூட்டம்
பாரதியார் பல்கலைக்கழக பின் பகுதி வழியாக இரவு வளாகத்திற்குள் நுழைந்தது.
அந்த யானை 2-வது கேட்டின் காவலாளி இருக்கும் இடத்தை நோக்கி சென்றது. இதனை
கண்டு அதிர்ச்சி அடைந்த காவலாளிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
காவலாளி அறையில் தும்பிக்கையை விட்டு உணவு ஏதாவது உள்ளதா என்று தேடி
பார்த்து சிறிது நேரம் அங்கேயே நின்றது. இந்த யானையை சிலர் செல்போனில்
படம் பிடித்தனர். அது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.இந்த
ஒற்றை யானை விரட்டுபவர்களை துரத்துவதாக பொதுமக்கள் தெரிவித்து
வருகின்றனர்.
எனவே மேற்கு மலைத்தொடர்ச்சி பகுதியில் சுற்றி வரும் இந்த ஒற்றை யானையை
அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படும் முன் வேறு இடத்திற்கு இடம் பெயர்ச்சி
செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
மேலும் யானை இருக்கும் இடத்தை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தால்
சம்பவ இடத்திற்கு தாமதமாக வருவதாகவும், ஒரு சில இடங்களில் காலை தான்
வருவதாகவும் விவசாயிகளும், பொதுமக்களும் புகார் தெரிவித்து உள்ளனர்.